தேவகோட்டை வக்கீல் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை

தேவகோட்டையில் வக்கீல் வீட்டை உடைத்து, மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கார்ப்பரேஷன் வீதியை சேர்ந்தவர் வக்கீல் சேகர். கடந்த 19ம் தேதி, குடும்பத்தாருடன் புதுக்கோட்டை சென்றார். மறுநாள் இரவு வீட்டிற்கு திரும்பியபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து, அதில் இருந்த பணம் ரூ. 2 லட்சம், 28 பவுன் நகை, வைரத்தோடு என 7 லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றை கொள்ளையடித்துள்ளது தெரிந்தது. ஏ.எஸ்.பி., ரமேஷ் சமந்த் ராஜேந்திரா, இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை விசாரிக்கின்றனர். மோப்ப நாய் சாம்ராட், தெருக்களில் ஓடி நின்றது.

தொடர் திருட்டு: இரண்டு ஆண்டுகளுக்கு முன், மர்மநபர்கள் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கொலை செய்து, 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். அதே தெருவில் சில தினங்களுக்கு முன், ஆசிரியர் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளை போனது. நகராட்சி தலைவரின் கணவருக்கு சொந்தமான கடையிலும் திருடு போனது. செபஸ்தியம்மாளிடம் 9 பவுன் செயின் வழிப்பறி செய்யப்பட்டது. நகரில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டுக்கள் நடப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவு ரோந்து பணி இல்லாததே முக்கிய காரணம், என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் நகை திருட்டு

தேவகோட்டை : தேவகோட்டை ஞானந்தகிரி நகரைச் சேர்ந்த செபஸ்தியம்மாள்,70. இவர், நேற்று மாலை 5.30 மணிக்கு சரஸ்வதி வாசகசாலைத் தெருவில் உள்ள சகாயமாதா கோயிலுக்கு சென்றார். முனீஸ்வரர் கோயில் அருகே திருப்பத்தில் வந்தபோது, அவ்வழியே வந்த இரண்டு பேர் தாங்களை “போலீஸ்’ என்று கூறி, “”கோயில் பக்கம் பெண்ணின் நகையை சிலர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்; நகையை போட்டுக்கொண்டு போகாதீர்கள். நாங்கள் போலீஸ்காரர்கள் நகைகளை கொடுத்து விட்டுபோங்கள். திரும்ப வந்து வாங்கிக் கொள்ளுங்கள்,” என கூறியுள்ளனர்.

இதை நம்பிய செபஸ்தியம்மாள் அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மூன்றரை பவுன் தாலி சங்கிலி, இரண்டரை பவுன் வளையல்களை கழற்றி கொடுத்துள்ளார். “”வெறும் கையோடு போகாதீர்கள்,” என கூறி தங்களிடமிருந்த இரண்டு கவரிங் நகைகளை கொடுத்து விட்டு தப்பினர். ஏமாந்ததை உணர்ந்த செபஸ்தியம்மாள் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இந்த இடத்தின் அருகே தான் 10 நாட்களுக்கு முன்பு பகலில் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தேவகோட்டை நகராட்சியில் கட்சிகள் கை கழுவிய வார்டுகள்

தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.இதில் அ.தி.மு.க.,வை தவிர எந்த கட்சியும் 27 வார்டுகளுக்கு போட்டியிடவில்லை. சில வார்டுகளில் போட்டியிட யாரும் வரவில்லை என்றும்,சில வார்டுகளில் “சிறப்பு கவனிப்பு’ காரணமாகவும் போட்டியிடவில்லை. கட்சிகள் கைகழுவிய வார்டுகள்:

தி.மு.க., : 1, 2, 6, 9, 12, 23,
காங்.,: 4, 5, 7, 15, 18, 21, 23, 24, 27.
தே.மு.தி.க. : 5, 6, 7, 11, 12, 13,15, 20, 23, 25, 27,

தமிழகத்தின் பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் தி.மு.க.,6 இடங்களிலும், சட்ட மன்ற எதிர்கட்சியானதால் நாங்கள் தமிழகத்தின் இரண்டாவது கட்சிஎன்று மார்தட்டும் தே.மு.தி.க., 11 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிட வில்லை. 23 வது வார்டில் அ.தி.மு.கவை தவிர எந்த கட்சியும் போட்டியிடவில்லை. சுயேச்சைகள் 4 பேர் போட்டியிடுகின்றனர்.12 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட தியாகராஜன் வேட்பு மனுதாக்கல் செய்தார். நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தார். கடைசி நிமிடம் வரை கட்சி அனுமதி கடிதம் கொடுக்காததால் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சிலம்பணி கோயில் அழகுபடுத்தப்படும்

தேவகோட்டை நகராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெகநாதன் போட்டியிடுகிறார். வீரபாண்டியபுரம் கிழக்கு,மேற்கு, நடுத்தெரு, மற்றும் சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி வீதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அவர் கூறியதாவது: மக்களின் அத்தியாவசிய தேவைகளை உரிய அதிகாரிகளை அணுகி நிறைவேற்றி வருகிறேன். தொடர்ந்து வழக்கமான பிரச்னையான குடிநீர், தெருவிளக்கு, சாலைகளை சரி செய்வேன். சிலம்பணி விநாயகர் கோயிலுக்கு பெண்கள் அச்சமின்றி செல்ல கூடுதல் தெருவிளக்கு, கோயிலை சுற்றி அசுத்தம் செய்யாமல் தடுக்கப்படும். அப்பகுதியில் நவீன சுகாதார வளாகம் கட்டப்படும். அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை மூலம் சிறுவர் பூங்கா அமைத்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் அழகுபடுத்தப்படும்.

சிலம்பணி ஊரணி தூர்வாரி படி கட்டப்படும். அனைத்து ரோடுகளிலும் கழிவுநீர் தேங்காமல் ஓட சாக்கடைகள் சீரமைக்கப்படும். மிக்சி,கிரைண்டர், பேன், அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர். ஜெ. துவக்கி வைத்த குறைந்த செலவில் அரசு கேபிள் இணைப்பை காலம் தாழ்த்தாமல் 14 வது வார்டு பகுதிக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தன்னிறைவு பெற்ற வார்டாகும் : காங்., வேட்பாளர் ராமு உறுதி

தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங்., சார்பில் ராமு போட்டியிடுகிறார்.

பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது: 60 ஆண்டு காங்.கட்சியில் பணியாற்றி எல்லோரும் அழகிரி என்று அழைக்கும் அழகர்சாமி மகன் என்பதால் மக்கள் ஆதரவு உள்ளது.குடிநீர் ,தெருவிளக்கு பிரச்னைகளை நிறைவேற்றுவேன். விரிவாக்கப்பகுதி என்பதால் மேம்பாட்டு வரிமூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைத்தாலும் தொடர்ந்து 3 வது வார்டு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. காமாட்சியம்மன் நகர், காடேரியம்பாள், மீனாட்சி நகர், ரமணமகரிஷி நகர் பகுதிகளில் தார் சாலை , தெருவிளக்கு அமைக்கப்படும். விவேகானந்தபுரம் சாலையில் தூர்ந்து போன கால்வாயை சீரமைத்து மழைநீர் செல்ல வடிகால் கட்டப்படும். முத்துராஜா நகர், பாரதி தெரு பகுதியில் தார் சாலை அமைக்கப்படும். நகராட்சி நிதியோடு எம்.பி.க்கள் நிதி உதவி பெற்று வார்டின் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படும். ஜெயங்கொண்ட விநாயகபுரத்தில் தெருவிளக்குகள் அமைத்து, மின்சாரம் இல்லாவிடினும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணாசாலையில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொண்டு நிறுவன உதவியோடு பூங்கா அமைக்கப்படும். ஒரு முறை வாயப்பு தந்தால் மறுமுறையும் மீண்டும் அமர்த்துமளவில் எனது பணிகள் அமையும். பின்தங்கிய மூன்றாவது வார்டை முன்மாதிரியாக தன்னிறைவு பெற்ற வார்டாக மாற்றுவேன். என்றார்.

உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும் : தேவகோட்டை அ.தி.மு.க., வேட்பாளர் சுமித்ரா

தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க. வேட்பாளர் சுமித்ரா முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது: எனது மாமனார் 1972 முதல் தீவிர உறுப்பினர். அவருடைய கட்சிப்பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக முதல்வர் நகராட்சிதலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் என்னை போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். தேவகோட்டையிலேயே பிறந்து வளர்ந்து இந்த நகரிலேயே எப்போதும் வசிக்கும் அரசியல் கட்சி வேட்பாளர் நான் மட்டுமே. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தலைவராக இருந்த ராமவெள்ளையன் செட்டியாருக்கு பிறகு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு முதல்வர் ஜெ. ஆசியுடன் எனக்கு கிடைத்துள்ளது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ராமவெள்ளையன் தலைவராக இருந்தபோது தான் இன்றும் தேவகோட்டையில் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவமனை, கல்லூரி கொண்டு வரப்பட்டது. தற்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான என்னை தேர்ந்தெடுத்தால் முதல்வரின் ஆசியுடன் காலம் போற்றும் நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்பட்டு வடிகால் கட்டப்படும். முதல்வர் ஜெ., அறிவித்த திட்டங்களான இலவச மிக்சி,கிரைண்டர், பேன் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் துவங்கி வைத்த குறைந்த கட்டண அரசு கேபிள் இணைப்பு தேவகோட்டை நகரிலும் மிக விரைவில் கிடைக்க சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். என்றார்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

பணப்பட்டுவாடா மாற்றி யோசியுங்கள் ஸ்ரீ: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பஞ்சநாதன்

தேவகோட்டை 20 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் பஞ்சநாதன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிடுங்கள். தகுதியற்றவர்கள் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை விலைக்கு வாங்குவார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொடு வீட்டுக்கும் முன்னும் ஓட்டுக்கள் விற்பனைக்கு இல்லை என்ற வாசகங்களை தொங்க விடவேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் துணிச்சல் வாக்காளர்களுக்கு தான் உண்டு. தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு வந்து போகும். ஒருநாள் பணம் 5 ஆண்டுகளுக்கு தீர்வாகாது. இந்த விஷயத்தை மக்கள் சிந்துத்து வாக்களிக்க வேண்டும். இந்திய அரசு பெருவாரியான மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் வைத்துள்ளதால் இது விஷயமானதாக இல்லை. வேட்பாளர் நேர்மையான, ஒழுக்கம் உள்ளவர்களாக, பொது நல சேவையில் ஈடுபடுவர்களாக இருக்க வேண்டும். என்றார்.

சமூக சேவைகள் தோற்பதில்லை : 2வது வார்டு சுயே. வேட்பாளர்

தேவகோட்டை நகராட்சி 2 வது வார்டில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குகானந்தம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முதியவரான இவர் வீடு வீடாக ஆதரவு கேட்டு செல்கிறார்.

பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது: மத்திய மாநில அரசுகளின் சேவையை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன. வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மன்றம் அமைத்து தார்ரோடு, விளக்குகள் அமைத்தேன். இப்போது இருக்கும் சீகூரணி பகுதியில் பஸ் ஸ்டாப் பெற்று தந்துள்ளேன். பல ஆண்டுகளாகியும் கண்டுகொள்ளபடாமல் இருக்கும் தில்லைநகர், செந்தில் நகர், மண்சாலைகளை தார்சாலைகளாக மாற்றுதல், அப்பகுதியில் மேல்நிலை தொட்டி ஏற்பாடு செய்து குடிநீர் கிடைக்க செய்யப்படும்.

எம்.எம். நகரில் இன்னும் பல சாலைகள் சீர்செய்யாமல் இருப்பதை ஒழுங்குபடுத்தி தார்சாலை போடப்படும். வீட்டுவாரிய குடியிருப்பில் பூங்காவிற்கான இடத்தில் பூங்கா அமைக்கப்படும். மேம்பாட்டு வரி அதிகம் வசூலாகும் 2 ம் வார்டின் இன்றியாமை தேவையை நிறைவேற்றுவேன். மின்மயானம் அமைக்க முதல் குரல் கொடுத்து அரசின் அனுமதியும் விரைவில் கிடைக்கும் நிலை உள்ளது.ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்தே பல சமூக சேவை செய்த எனக்கு கவுன்சிலர் பொறுப்பும் கிடைக்கப் பெற்றால் மேலும் சிறப்பாக சேவை செய்வேன். ராம்நகரில் தினசரி சந்தை அமைக்கப்படும். சமூக சேவை செய்பவர்களின் தொண்டு எப்போதும் தோற்பதில்லை என்று கூறி பிரச்சாரம் செய்தார்.

மனைவி தேர்தலில் போட்டி: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கணவன் கைது

தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மனைவி வடிவுக்கரசி என்பவர் போட்டியிடுகிறார். ராமநாதன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவாக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கேசவன், தேவகோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த ராமநாதனை, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராமநாதன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவகோட்டை, மானாமதுரையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., நியமனம்

சிவகங்கை : காஞ்சிபுரத்தில் பயிற்சியில் இருந்த எஸ். சமன்ந்த்ரோஷன் ராஜேந்திரா, தேவகோட்டை ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.தேவகோட்டை சப்- டிவிஷனில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், நகைக்கடை, வீடுகளில் நடக்கும் திருட்டு,கொள்ளையை தடுக்க, இங்கு, ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் ஏ.எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக, அஸ்வின்கோட்னீஸ் இங்கு ஏ.எஸ்.பி.,யாக இருந்தார். அவருக்கு பின், டி.எஸ்.பி.,க்களே இருந்தனர். இதனால், இங்கு தீவிர கண்காணிப்பு இன்றி தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்காளிகள் வீடுகளிலேயே பல லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.

இது போன்று திருட்டுக்களை தடுக்கும் வகையில், இங்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்து காஞ்சிபுரத்தில் பயிற்சியில் இருந்த, எஸ். சமன்ந்த்ரோஷன் ராஜேந்திராவை, தேவகோட்டை ஏ.எஸ்.பி.,யாக நியமித்து, உள்துறை செயலாளர் ரமேஸ்ராம் மிஸ்ரா உத்தரவிட்டார். நேற்று அவர் தேவகோட்டையில் பொறுப்பேற்றார்.மானாமதுரை சப் டிவிஷன் டி.எஸ்.பி.,யாக இருந்த கண்ணன், அருப்புக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பின், இங்கு டி.எஸ்.பி., பணியிடம் நிரப்பபடவில்லை. திருநெல்வேலி தனிப்பிரிவு (ஐ.எஸ்) உதவி கமிஷனராக இருந்த எஸ்.லயோலா இக்னேஷியஸ், மானாமதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவரும் நேற்று பொறுப்பேற்றார்.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.