தேவகோட்டையில் வக்கீல் வீட்டை உடைத்து, மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கார்ப்பரேஷன் வீதியை சேர்ந்தவர் வக்கீல் சேகர். கடந்த 19ம் தேதி, குடும்பத்தாருடன் புதுக்கோட்டை சென்றார். மறுநாள் இரவு வீட்டிற்கு திரும்பியபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து, அதில் இருந்த பணம் ரூ. 2 லட்சம், 28 பவுன் நகை, வைரத்தோடு என 7 லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றை கொள்ளையடித்துள்ளது தெரிந்தது. ஏ.எஸ்.பி., ரமேஷ் சமந்த் ராஜேந்திரா, இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை விசாரிக்கின்றனர். மோப்ப நாய் சாம்ராட், தெருக்களில் ஓடி நின்றது.
தொடர் திருட்டு: இரண்டு ஆண்டுகளுக்கு முன், மர்மநபர்கள் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கொலை செய்து, 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். அதே தெருவில் சில தினங்களுக்கு முன், ஆசிரியர் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளை போனது. நகராட்சி தலைவரின் கணவருக்கு சொந்தமான கடையிலும் திருடு போனது. செபஸ்தியம்மாளிடம் 9 பவுன் செயின் வழிப்பறி செய்யப்பட்டது. நகரில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டுக்கள் நடப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவு ரோந்து பணி இல்லாததே முக்கிய காரணம், என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.